நான்காம் நாள் – அர்ச். அந்தோனியாருடைய அழைப்பு

1210 ம் வருஷம் நமது அர்ச்சியசிஷ்டவருக்குப் பதினைந்து பிராயமானபோது வெகு அழகு சௌந்தரியமுள்ளவராக இருந்தார். உலகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவதற்கும், உத்தியோகப் பெருமைகளை அடைவதற்கும் வேண்டிய ஆஸ்தியோ, நற்குணங்களோ, சாஸ்திரமோ இவையெல்லாம் அவரிடத்தில் குறைவில்லாதிருந்தபோதிலும், நாளுக்குநாள் உலகத்தின் மட்டில் வெறுப்புண்டாகி, சிறு பிராயத்தில் உலக மாயைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு ஆசைப்பட்டு, தம்மைப் பெற்றோருடைய அனுமதி பெற்று அர்ச், அகுஸ்தீன் சபைச் சந்நியாசிகளுடைய மடத்தில் சேர்ந்தார்.
ஆனால் அம்மடம் தாம் பிறந்த பட்டணத்துக்கு வெகு அருகாமையிலிருந்ததாலும், ஏற்கனவே வெகு கட்டாயத்தின்பேரில் தமக்கு உத்தரவு தந்த தாய் தந்தையும் உறவின் முறையார் சிநேகிதர்களும் அருகாமையிலிருந்ததாலும் தன் துறவு கோலத்துக்கு இடையூறு நடக்கக் கூடுமென்று அர்ச்சியசிஷ்டவர் அஞ்சி தூரத்திலுள்ள கோயிம்பிரா பட்டணத்திலிருக்கும் சந்நியாசிகள் மடத்துக்குத் தன்னை அனுப்பிவிடும்படி பெரியவர்களைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு அம்மடம் சேர்ந்து செபத்திலும், படிப்பிலும், கைவேலையிலும், தியானத்திலும் மற்றச் சந்நியாசிகளைப்போலக் காலம் செலவழித்து வந்தார். தனக்கிடப்பட்ட வேலைகளை வெகு கீழ்ப்படிதலோடும், சுறுசுறுப்போடும் செய்து வந்தார். ஒருநாள் தமக்கிடப்பட்ட வேலையை அவர் செய்து கொண்டிருந்தபோது, கோயிலில் தேவநற்கருணை எழுந்தேற்ற மணியடிக்கக் கேட்டு தானிருந்த இடத்திலேயே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன் இரட்சகரை ஆராதித்தார்.
ஓ! புதுமை! திடீரென கோயிற் சுவர் விரிந்து மடத்துக் கோயில் பீடத்துக்கு முன்பாக முழங்காற்படி பிட்டது. அதனால் அது சர்வேசுரனுடைய சித்தமென்ரறிந்து அர்ச். பண்டங்கள் அடங்கியிருந்த பெட்டியைப் மடத்தின்மேல் ஸ்தாபித்து வைத்தார்கள். இதைக் கண்ட அர்ச். அந்தோனியாருடைய மனதில் அப்போதே பிரதேசங்கள் போய் வேதத்தைப் போதிக்கவும், வேதசாட்சி முடி பெறவும் அளவற்ற ஆசை பிறந்தது.
ஆனதால் தாமிருந்த மடத்தை விட்டு அர்ச். பிரான்சீஸ்கு சபையிற் சேரவேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு உண்டான போதிலும் சர்வேசுரனுடைய சித்தமென்னவோவென்று தன் மனதில் தத்தளித்து, அர்ச். பண்டங்களுக்கு முன்பாக வேண்டிக்கொண்டு வந்தபோது, ஓர் இரவு அர்ச். பிரான்சிஸ்கு அவருக்குத் தரிசனை காண்பித்து அவர் தம்முடைய சபையிற் சேர சர்வேசுரன் பேரால் அவருக்குக் கட்டளையிட்டார்.”
அப்போது அவரிருந்த மடத்துச் சிரேஷ்டரும் மற்றச் சகோதரர்களும் அதிக விசனமடைந்தாலும், பிரான்சிஸ்கு சபைச் சந்நியாசிகள் கொண்டுவந்த கனமான அங்கியைத் தரித்து மாரோக் தேசம் அனுப்பப்படுகிற வார்த்தைப் பாட்டின்மேல், வேதசாட்சி முடி பெறலாமென்கிற ஆசையோடு அந்தோனியாரென்னும் பெயர் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

நம்முடைய அழைப்புக்குத் தகுந்த பிரகாரம் நமது அந்தஸ்தில் நாம் செய்யவேண்டிய காரியங்கனோ, படவேண்டிய பாடுகளோ, சர்வேசுரன் அநேகங் கட்டளையிட்டிருந்தபோதிலும் அவைகளையெல்லாம் நாம் நிறைவேற்றவோ, சகிக்கவோ, வரும் தந்திரங்களைச் ஜெயிக்கவோ வேண்டிய ஒத்தாசை, தைரியம், வரப்பிரசாதம் நமக்குக் கொடுக்கிறார். அர்ச், அந்தோனியாருடைய தாய் தகப்பன் தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தது போல், பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்மாரே, நாம் எல்லோருமே சர்வேசுரனுக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, உங்கள் பிள்ளைகளைச் சர்வேசுரன் அமைக்கத் திருவுளமானால் அவர்களைச் சந்தோஷமாய் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மட்டிலும் உங்கள் பிள்ளைகளின் மட்டிலும் தேவாசீர்வாதமும் அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகமும் உண்டாகும்.

செபம்
ஓ மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, உலக ஆபத்துகளையும், தந்திரச் சோதனைகளையும் நீக்கி விலகுகிறதற்கு உலகப் பெருமை, ஆஸ்தி, சுகம் இவை யாவையும் புறக்கணித்துச் சந்நியாசி கள் சபையில் உட்பட்டீரே, அடியோர்களுக்கும் உலக வீண் பெருமை, சிலாக்கியம், சுகம் இவைகள் மட்டில் மெய்யான வெறுப்பை அடைந்தருளக் கிருபை புரியும். – ஆமென்.

நற்கிரியை – யாதாமொரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.
மனவல்லயச் செபம் – உலகத்தை வெறுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started